வயநாடு நிலச்சரிவு: மீட்புப்பணியில் இறங்கிய சேவா பாரதி 

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்பு உண்டான இடங்களில் சேவா பாரதி சார்பாக பல நூறு ஸ்வயம் சேவகர்கள் களத்தில் பணி செய்து கொண்டிருக்கின்றனர். இதில் மீட்புப்பணியில் நான்காம் நாளான இன்று மட்டும் 254 பேர் களத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சேவா பாரதி விடுத்துள்ள செய்தியில், “நிலச்சரிவில் புதையுண்ட சடலங்களை தேடும் பணி, சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவத்திற்கு உதவி செய்வது, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை செய்யும் பாலம் அமைத்தல் போன்ற பிற பணிகளுக்கு உதவுவது என முழு ஈடுபாட்டுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெங்களூரில் இருந்து 9 பேர் கொண்ட டாக்டர் குழு வந்துள்ளனர்‌. அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் பணி செய்கின்றனர்

காலமானவர்களை எரியூட்டும் பணி: நிலச்சரிவு உண்டான பகுதியில் ஒரு கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுடுகாடு உள்ளது. அதை விரிவுபடுத்தி, சுத்தப்படுத்தி வருகின்ற சடலங்களை மரியாதையான இடத்தில் வைத்து தாய்மார்கள் ராம நாமம் கூறி மரியாதை செய்த பிறகு, அவரவர் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்படுகிறது. இதுவரை 43 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

உணவு வழங்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல பணிகள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் செய்ய திட்டங்கள் உள்ளன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE