வயநாடு நிலச்சரிவு: 4-ம் நாள் தேடுதலில் உயிருடன் மீட்கப்பட்ட குடும்பம்

By செய்திப்பிரிவு

சூரல்மலா: வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சூரல்மலா பகுதியில் மீட்புப்பணிகளின்போது நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்பத்தினர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சூரல்மலாவின் படவெட்டிகுன்னுவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயங்களுடன் அவர்களது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தில், தலா இரண்டு ஆண்களும் பெண்களும் இருப்பதாகவும், அதில் ஒரு பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் உயிருடன் இருக்கும் இந்தச் செய்தி அப்பகுதி மக்களுக்கும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது.

படவெட்டிக்குன்னு சூரல்மலாவில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட அந்தக் குடும்பத்தினரை மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ராணுவம் ஏற்பாடு செய்து வருகிறது.

இதுதொடர்பாக சூரல்மாலா வார்டு உறுப்பினர் நூருதீன் கூறுகையில், “மீட்கப்பட்ட குடும்பம், அப்பகுதியில் தோட்டம் வைத்திருந்த ஜானியின் குடும்பம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது குடும்பத்துடன் வீட்டில் தங்கியிருந்தார். அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்பாளர்கள் அனைவரும் தற்போது முகாமில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 295 பேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி மிகத்தீவிரமாக நடைபெறுகிறது என்றும் மீட்புக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் உயிர் பிழைத்தோர் எங்கேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி அதன் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE