எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு அளித்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துஉள்ளது.

தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுதொடர்பான தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல, பஞ்சாப் மாநில அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி, மஜாபி சமூக மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது. இதை எதிர்த்து பஞ்சாப் - ஹரியாணா மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, ‘பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கியது செல் லாது’ என்று அந்த நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்குடன், தமிழகத்தில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கும் இணைக்கப்பட்டது. தமிழகம், பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களின் உள்ஒதுக்கீடு தொடர்பான 23 வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டன. முதலில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து கடந்த 2020 ஆகஸ்டில் தீர்ப்பளித்தது.

இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வு தேவை என்பதால், 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், மனோஜ் மிஸ்ரா, விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சதீஷ் சந்திர மிஸ்ரா, பெலா எம்.திரிவேதி ஆகிய 7 பேர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்க தொடங்கியது.

பஞ்சாப் மாநில அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் குர்மிந்தர் சிங், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். எதிர் மனுதாரர் தேவேந்தர் சிங் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மனோஜ் ஸ்வரூப், சாலில் சாகர், கே.எஸ்.சவுகான், சஞ்சய் ஹெக்டே, சாகட் சிங் உள்ளிட்டோர் வாதிட்டனர்.

மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜ ராகினர். ‘‘இடஒதுக்கீட்டுக்கான நோக்கத்தை, உள்ஒதுக்கீடு அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வரும் சமூகங்களுக்கு சம வாய்ப்பை அளிக்க உள்ஒதுக்கீடு வகை செய்கிறது’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தீர்ப்பு தள்ளிவைக்கப் பட்டது. இந்நிலையில், 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

‘‘பட்டியலின, பழங்குடியினருக் கான இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இருக்கிறது’’ என்று 6 நீதிபதிகள் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பளித்தனர். மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று நீதிபதி பெலா எம்.திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதையடுத்து, பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கியது இறுதி தீர்ப்பாக ஏற்கப்பட்டது. தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

கடந்த 2000-ம் ஆண்டில் ஆந்திராவில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திர அரசு - இ.வி.சின்னையா இடையிலான வழக்கை கடந்த 2005-ம் ஆண்டில் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு, ஆந்திர அரசின் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே பஞ்சாப் மாநில அரசின் உள்ஒதுக்கீடு சட்டத்தை, மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இ.வி.சின்னையா வழக்கில் சட்டப் பிரிவு 341-ன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த சட்டப் பிரிவு, இடஒதுக்கீட்டுக்கான சாதிகளை அடை யாளம் காண மட்டுமே வழிவகை செய்கிறது. எனவே, கடந்த 2005-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினருக்கான (எஸ்டி) இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனினும், உரிய ஆய்வுகளுக்கு பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். துல்லியமான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மட்டுமே உள்ஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும். அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம், பஞ்சாப் அரசின் உள்ஒதுக்கீடு சட்டம் செல்லும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.

‘எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் அவசியம்' - இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய 6 நீதிபதிகளில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சுபாஷ் சந்திர சர்மா ஆகிய 4 நீதிபதிகள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:

நீதிபதி பி.ஆர்.கவாய்: எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்த புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும்.

நீதிபதி பங்கஜ் மித்தல்: முதல் தலைமுறையினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். முதல் தலைமுறை உயர்ந்த நிலையை எட்டிவிட்டால், 2-ம் தலைமுறைக்கு இடஒதுக்கீடு வழங்க கூடாது.

நீதிபதி விக்ரம் நாத்: தற்போது ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே கிரீமிலேயர் நடைமுறை அமலில் உள்ளது. இதே நடைமுறையை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் அமல்படுத்த வேண்டும்.

நீதிபதி சதீஷ் சந்திர சர்மா: எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE