புதுடெல்லி: உத்தர பிரதேசம் ஷாயி ஈத்கா மசூதி வழக்கில் முஸ்லிம்களின் மனுக்களை தள்ளுபடி செய்து அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுராவிலுள்ள கிருஷ்ணஜென்ம பூமி கோயில் இந்துக்களின் புனிதத்தலமாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இங்கிருந்த பழமையான கிருஷ்ணர் கோயில், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவால் இடிக்கப்பட்டு பாதி நிலத்தில் ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக புகார் கூறப்படுகிறது.
இதனை குறிப்பிட்டு அப்பகுதிஇந்துக்கள் மசூதி உள்ள இடத்தைகோயிலிடம் திரும்ப ஒப்படைக்கும்படி கூறி வந்தனர். அதன் பிறகு இப்பிரச்சினையில் இந்து-முஸ்லிம் தரப்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அக்கோரிக்கை கைவிடப்பட்டிருந்தது. அயோத்தியின் பாபர் மசூதி வழக்கில் கடந்த2019-ல் தீர்ப்பு வெளியானது. இது இந்து தரப்பினருக்கு சாதகமாகி ராமர் கோயில் கட்டப்பட்டதை அடுத்து, மதுரா மசூதி மீதும் 18 சிவில் வழக்குகள் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் ஷாயி ஈத்கா மசூதி நிர்வாகம் எதிர் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி மயாங் குமார் ஜெயின்விசாரித்து வந்தார். இவ்வழக்கின் விசாரணை கடந்த ஜுன் 6-ல்முடிந்தது. அப்போது ஒத்திவைக்கப்பட்ட அவ்வழக்கின் தீர்ப்பு நேற்றுவெளியானது. அதில், முஸ்லிம்கள் தரப்பில் தடை கோரி தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஷாயி ஈத்கா மசூதி நிர்வாகத்தினர் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசின் புனிதத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன்படி இந்துக்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வஃக்பு வாரியச் சட்டப்படி முஸ்லிம் வழிபாட்டுத்தலங்களை மாற்ற முடியாது. இப்பிரச்சினையில், எங்கள் ஷாயி ஈத்கா மசூதி நிர்வாகம் மற்றும் கிருஷ்ணஜென்ம பூமி கோயில் அறக்கட்டளைக்கு இடையே1968-ல் ஒரு உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது. சுமார் 60வருடங்களுக்கு பின் இந்த ஒப்பந்தம் தவறு எனக் கூறுவது ஏற்புடையதல்ல. இவ்வழக்கை தொடுத்தவர்கள் கோயிலுக்கு தொடர்பில்லாதவர்கள்” என்று தெரிவித்திருந்தனர்.
இதற்கு முன்பாக, இந்து தரப்பினர் தாக்கல் செய்த மனுவில், “மசூதி அமைந்த அனைத்து நிலங்களும் கிருஷ்ணஜென்ம பூமிக்கு சொந்தமானது. மசூதிக்கான நிலம்தங்களுடையது என்பதற்கு ஆதாரமாக ஷாயி ஈத்கா நிர்வாகத்திடம் எந்த பதிவேடுகளும் இல்லை. உரிமைக்கான நிலப்பத்திரங்கள் இன்றி ஷாயி ஈத்கா மசூதியை வஃக்பு வாரியத்துக்கு சொந்தமானதாகக் கூற முடியாது” என்று கூறியிருந்தனர்.