பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது.
பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் உள்ள விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஆர்அசோகா குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘முதல்வர் சித்தராமையா தனதுமனைவிக்கு மாற்று நிலம் வழங்கிய விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய்அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐவிசாரணை கோரியும், சித்தராமையா பதவி விலக வலியுறுத்தியும் பாஜக, மஜத கூட்டாக இணைந்து பாதயாத்திரை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆக. 3-ல் பெங்களூருவில் தொடங்கும் இந்த யாத்திரை 7-ம் தேதி மைசூருவை அடையும்’’ என்றார்.