ராஜஸ்தானில் உள்ள காதலனை சந்திக்க எல்லை தாண்டிய பாக். பெண்

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் தைச் சேர்ந்த மேவிஷ், லாகூரைச் சேர்ந்த பதாமி பாக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 7 மற்றும் 12 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு மேவிஷும் குவைத்தில் வேலை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பிகானெரைச் சேர்ந்த ரஹ்மானும் சமூக வலைதளம் மூலம் நண்பராகி உள்ளனர். நட்பு காதலாக மலர்ந்துள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தனர். அடுத்த 3 நாட்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 2023-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் மெக்காவுக்கு சென்ற இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் மேவிஷ் இஸ்லாமாபாத் சென்றுவிட்டார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத் திலிருந்து லாகூர் சென்ற மேவிஷ், கடந்த 25-ம் தேதி பஞ்சாபின் வாகா எல்லை வழியாக இந்தியா வந்துள்ளார்.

இவருடைய ஆவணங்களை பரிசீலித்த இரு நாட்டு அதிகாரிகளும் 45 நாள் சுற்றுலா விசா வழங்கி உள்ளனர். அதன் பிறகு ரஹ்மானின் சொந்த ஊரான பிதிசார் கிராமத்துக்கு சென்றுள்ளார். அவரை ரஹ்மான் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE