3 மாணவர்கள் உயிரிழப்பு எதிரொலி: டெல்லியில் மேலும் 13 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திடீர் வெள்ளத்தில் சிக்கி டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக டெல்லி பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள மேலும் 13 பயிற்சி மையங்களுக்கு சட்டவிரோதமாக இயங்கியதாகக் கூறி மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக டெல்லியில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குதான் பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், அங்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ராவ் பயிற்சி மையத்தின் தரைதளத்தை சேமிப்பகம் அல்லது வாகன நிறுத்தப் பகுதியாக மட்டுமே பயன்படுத்த டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில் விதிகளை மீறி அங்கு நூலகம் நடத்தப்பட்டுள்ளது. இதுவே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் இயங்கிவந்த 13 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. சட்டவிரோதமாக இயங்கியதாகக் கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் குருகுல், சாஹல் அகாடமி, சாய் டிரேடிங், ஐஏஎஸ் சேது, டாப்பர்ஸ் அகாடமி, டைனிக் சாம்வாட், சிவில்ஸ் டெய்லி ஐஏஎஸ், கரீர் பவர், 99 நோட்ஸ், வித்யா குரு, கைடன்ஸ் ஐஏஎஸ், ஈஸி ஃபார் ஐஏஎஸ் ஆகிய பயிற்சி மையங்கள் சீல் வைப்பு நடவடிக்கைக்கு உட்பட்டன.

இந்தப் பயிற்சி நிறுவனங்கள் விதிகளுக்குப் புறம்பாக தரைத்தளத்தில் இயங்கி வந்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநகராட்சி மேயர் ஷாலி ஒபராய் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விபத்து நடந்த ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கும் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக, ராவ் பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம்: ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர்களது மரணத்துக்கு நீதி கேட்டுடெல்லி முழுவதும் மாணவர்களின் போராட்டம் நேற்று தீவிரம் அடைந்தது. டெல்லி மேயரின் வீட்டை முற்றுகையிட்டு பல்வேறு மாணவ அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டெல்லி ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தைக் கண்டித்து இன்றும் (திங்கள்கிழமை) 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த மையத்தின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை வேண்டும். உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அறிவிக்க வேண்டும். எங்களுக்கு எஃப்ஐஆர் பிரதி வழங்கப்பட வேண்டும். பயிற்சி மைய நிர்வாகிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தீவிர கண்காணிப்புகளை அரசுத் தரப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் முன்வைக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE