கன்வர் யாத்திரையில் அமைதியை நிலைநாட்டவே வியாபாரிகளின் பெயர்களை வைக்கும் உத்தரவு: உ.பி அரசு விளக்கம் @ சுப்ரீம் கோர்ட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தயாத்திரை செல்லும் வழித்தடத்தில்உள்ள உணவக உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கு அகிலேஷ் யாதவ் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெயர்பலகையில் உரிமையாளர் பெயரைஎழுதி வைத்திருக்க வேண்டும்என யாரையும் கட்டாயப்படுத் தக்கூடாது என்று தெரிவித்தது.

இந்நிலையில், உத்தர பிரதேசம்,உத்தராகண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெள்ளிக்கிழமைக்குள் (நேற்று) பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவித்திருந்தநிலையில் தற்போது உத்தர பிரதேசஅரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து நேற்று உச்ச நீதி மன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, “கன்வர் யாத்திரைசெல்லும் வழியில் அமைதியை உறுதிசெய்யவும், யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராகநடத்தவுமே உ.பி. மாநில அரசு இந்தஉத்தரவை பிறப்பித்துள்ளது. தவறுதலாகக் கூட கன்வர் பக்தர்களின் மத நம்பிக்கை புண்பட்டு விடக்கூடாதுஎன்பதற்காக, முந்தைய காலங்களில் நடந்த சில அசவுகரியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் பல பக்தர்கள், கடைகள் மற்றும் உணவகங்களின் பெயர்கள் தங்களைக் குழப்புவதாக அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர். அந்த புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டே இந்த உத்தரவை அரசு பிறப்பித்தது. உணவகங்களில் அசைவம் சமைக்கக்கூடாது என்று நாங்கள் எந்தஉத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பெயரை கடை முன்னால் எழுத வேண்டும் என்று மட்டுமே உத்தரவில் கூறியிருந்தோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE