தமிழக மீனவர்கள் பிரச்சினை: மத்திய அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்.பி மனு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஐயூஎம்எல் கட்சியின் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார். அப்போது, இதுபோன்ற கைதுகள் இல்லாத வகையில் நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்தினார்.

இது குறித்து ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வழங்கிய மனுவில், ‘இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாததால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடந்த ஜூலை 1-ம் தேதி மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்களை கைது செய்து அவர்களது நான்கு நாட்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, 9 மீனவர்களையும், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மீனவர்களை கைது செய்து, நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும. இந்திய அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE