“நீங்கள் ஒரு பெண்... உங்களுக்கு எதுவும் தெரியாது” - பிஹார் பேரவையில் நிதிஷ் கொந்தளிப்பால் சலசலப்பு

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால், அம்மாநில முதல்வர் முதல்வர் நிதிஷ் குமார் கடும் கோபமடைந்தார். கேள்வி எழுப்பிய ஆர்ஜேடி பெண் எம்எல்ஏ ரேகா பாஸ்வானை நோக்கி, “நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது” என்று ஆவேசமாகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

பிஹார் சட்டப்பேரவையில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. புதன்கிழமை அவை கூடியதும், சாதிவாரி இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கை தொடர்பாக சபையில் எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் திடீரென கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பெண் எம்எல்ஏ ஒருவரை விமர்சித்துப் பேசினார்.

இந்த விவாதத்தின்போது ஆர்ஜேடி பெண் எம்எல்ஏ ரேகா பாஸ்வான் கேள்வி கேட்க, உடனே கோபமாக எழுந்த முதல்வர் நிதிஷ் குமார், "2005-க்குப் பிறகு, எனது அரசாங்கம் பெண்களை முன்னோக்கி கொண்டு வந்தது. அதனால்தான் இன்று உங்களால் இவ்வளவு பேச முடிகிறது. அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இடஒதுக்கீடு வேலையை நாங்கள் செய்து முடித்தோம். உங்கள் கட்சி எங்களுடன் கூட்டணியில் இருந்தபோது, ​​அனைவரும் இதற்கு ஆதரவு அளித்தது உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நீங்களோ அல்லது உங்கள் தரப்போ பெண்களுக்கு எதாவது செய்துள்ளீர்களா? 2005-க்கு பிறகு பெண்களை முன்னேற்றியது எங்கள் அரசுதான். பெண்களை உயர்த்தியவர்கள் நாங்கள்தான். பாட்னா உயர் நீதிமன்றம் சாதிவாரி இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்துள்ளது. ஆனால், மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேலும் சாதிவாரி இடஒதுக்கீட்டை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க அரசு கோரிக்கை வைத்துள்ளது" என்று கோபமாக பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE