வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரம்: 4,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் மற்றும் சிறுபான்மையினர் என பல வகைகளில் வங்கதேசத்தில் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வந்தன. அவற்றை ரத்து செய்ய கோரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அது கலவரமாக மாறி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 93 சதவீதம் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படும் என்றும் 7 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு என்றும் உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், வங்கதேசத் தில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 2 நாட்களில் மட்டும் 4,500-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. வங்கதேச எல்லையில் பத்திரமாக இந்தியாவுக்குள் நுழைவதற்கு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், வங்கதேசத்தில் உள்ளஇந்தியர்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். உதவிகளுக்கு இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE