பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின பெண் கமலா புஜாரி காலமானார்

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் பத்ராபுத் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கமலா புஜாரி (76). இயற்கைவழி வேளாண்மையை ஊக்குவித்து வந்த இவர், 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வந்தார். இவருடைய இந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், காய்ச்சல் மற்றும்வயது மூப்பு காரணமாக கோராபுட் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, கட்டாக் நகரில் உள்ளஎஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று காலையில் தெரிவித்தது.

இதையடுத்து, கமலாவின் மகன் கங்காதரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். மேலும் கமலாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

கமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஏழை பழங்குடி குடும்பத்தில் பிறந்த கமலாவுக்கு பாரம்பரிய நெல் வகைகள் மீது ஆர்வம்இருந்தது. 1994-ம் ஆண்டில் கோராபுட்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட பங்கேற்பு ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக இவர் இருந்தார். இது அதிக மகசூல்தரும் மற்றும் உயர்தர அரிசி வகையான ‘காளஜீரா' நெல் சாகுபடிசெய்ய வழிவகுத்தது. ‘டிலி', ‘மச்சகந்தா', ‘பூலா', ‘க்னாதியா' போன்ற அரிய நெல் வகைகளையும் அவர் பாதுகாத்து வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE