“ராகுல் காந்தி, இண்டியா கூட்டணியினர் ஆணவம் காட்டுகின்றனர்” - அமித் ஷா பேச்சு

By செய்திப்பிரிவு

ராஞ்சி: பழங்குடியினரின் நிலங்கள், உரிமைகளை பாதுகாக்க ஜார்க்கண்டில் மக்கள் தொகை குறித்த வெள்ளை அறிக்கையை பாஜக வெளியிடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், “ராகுல் காந்தி, இண்டியா கூட்டணியினர் ஆணவத்தைக் காட்டுகின்றனர்” என்று அவர் சாடினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “ஜார்க்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் 81 சட்டமன்றத் தொகுதிகளில் 52 தொகுதிகளில் ஏற்கெனவே தாமரை மலர்ந்துள்ளதால், ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு, பழங்குடியின மக்களின் நிலங்கள், இட ஒதுக்கீடு மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள்தொகை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல்வராக இருந்தும், அவர் (ஹேமந்த் சோரன்) தனது மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

மக்களவைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டிருந்தாலும், அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆணவத்தைக் காட்டுகின்றனர். கடந்த 2014, 2019, 2024-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் மொத்தமாக காங்கிரஸ் வெற்றி பெற்றதை விட, இந்த தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது. அதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பேசினார். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, லக்‌ஷ்மிகாந்த் பாஜ்பாய், அர்ஜுன் முண்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE