வழக்கறிஞர்களுடன் உரையாட கூடுதல் நேரம் கோரிய கேஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், திஹார் சிறையில் உள்ளார். அவர் வாரத்துக்கு இருமுறை தனது வழக்கறிஞர்களுடன் உரையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கூடுதலாக இரண்டு முறை இணையம் வழியாக உரையாட அனுமதி கோரி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நேற்று அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. கேஜ்ரிவாலின் மனுவை திஹார் சிறை அதிகாரிகள் தரப்பும், அமலாக்கத் துறையும் எதிர்த்து வாதிட்டன.

“திஹார் சிறையில் பல கைதிகள் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திலேயே வழக்கறிஞர்களுடன் உரையாடுகின்றனர். இதனால், கேஜ்ரிவாலுக்கு மட்டும் கூடுதல் நேரம் வழங்குவது என்பது அவருக்கு தனிச் சலுகை வழங்குவதாக கருதப்படும்” என்று திஹார் சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், கேஜ்ரிவால் வழக்கறிஞர்களுடனான உரையாடல் நேரத்தைப் பயன்படுத்தி டெல்லி அரசை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார் என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பையும் கேட்டறிந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE