“ஊடகங்கள் ஆக்கபூர்வ முயற்சிகளில் கவனம் செலுத்துவது இல்லை” - குடியரசுத் துணைத் தலைவர் கவலை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஊடகங்கள் ஆக்கபூர்வமான முயற்சிகளில் போதுமான கவனம் செலுத்தாதது கவலை அளிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

இந்தி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாணவர்கள் மத்தியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "ஊடகங்கள் தங்களுக்குள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக் கதையை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நோக்கம் கொண்ட கதையாடல்களுக்காக ஊடகங்கள் வணிகமயமாக்கப்படுவது மற்றும் கட்டுப்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இதழியலின் பங்கு முக்கியமானது. ஊடகங்கள் ஒருதலைப்பட்சமான கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு, தேசிய நலன்களுக்கு எதிரான சக்திகளுடன் அணி சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.

பத்திரிகைத் துறையில் மிக உயர்ந்த தரத்துடன் வாழ வேண்டும். பத்திரிகையாளர்கள் தங்களை, அரசியல் கட்சிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. இது ஆத்ம தேடலுக்கான நேரம். வளர்ச்சியில் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்று ஊடகங்களை நான் பணிவுடனும் அக்கறையுடனும் கேட்டுக்கொள்கிறேன். நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதன் மூலமும், தவறான சூழ்நிலைகள் மற்றும் குறைபாடுகளை விமர்சிப்பதன் மூலமும் அவர்கள் இதைச் செய்ய முடியும்.

அரசியல் நிர்ணய சபையின் புனிதமான கொண்டாட்டத்திற்கு இணையாக ஜனநாயகக் கொள்கைகள் போற்றப்படுகின்றன. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிகரித்து வரும் இடையூறுகள் மற்றும் பரபரப்பான போக்கு கவலை அளிக்கிறது. அரசியலமைப்பு சபை ஜனநாயகத்தின் கோவிலாக இருந்தது, அங்கு ஒவ்வொரு அமர்வும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் நமது தேசியத்தின் அடித்தளத்திற்கு பங்களித்தது. இடையூறுகள் விதிவிலக்குகளாக இல்லாமல் அரசியல் கருவிகளாக மாறியிருப்பது வருந்தத்தக்கது.

இடையூறுகளை பெருமைப்படுத்தும் ஊடகங்களின் போக்கு கவலை அளிக்கிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் தங்களது முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். இடையூறுகள் தலைப்புச் செய்திகளாக மாறும் போது, சீர்குலைப்பவர்கள் ஹீரோக்களாகப் போற்றப்படும்போது, ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் கடமையிலிருந்து இதழியல் தவறிவிடுகிறது.

இந்தியாவின் தோற்றத்தை உலகிற்கு துல்லியமாக சித்தரிப்பதில் ஊடகங்கள் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். வெளியில் இருந்து வருபவர்கள் இந்தியாவை எடைபோட முடியாது. அவர்கள் அதைத் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்தில் செய்கிறார்கள். நாம் ஒரு வல்லரசாக மாறி வருகிறோம் என்ற நமது எதிர்பாராத மற்றும் கற்பனை செய்ய முடியாத முன்னேற்றத்தை ஜீரணிக்க முடியாதவர்கள், உள்நாட்டில் குறைவாகவும், வெளியில் அதிகமாகவும் உள்ளனர். 5,000 ஆண்டுகால ஆழமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டது இந்தியா. அதன் ஜனநாயக அமைப்புகள் வலிமையுடன் இருக்கின்றன" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE