மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவை: எல் முருகன் தொடங்கிவைக்கிறார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மேட்டுப்பாளையத்தில் நாளை கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ரயில் சேவை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல், கோவை- மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவையை போத்தனூர் வரை நீட்டிக்கவும், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சாமல்பட்டியில் புதிய ரயில் நிறுத்தம் ஏற்படுத்தவும், மைசூரு- மயிலாடுதுறை எக்ஸ்பிரசை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கவும், தற்போது வாரம் 5 நாள் இயக்கப்படும் மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ரயில் இயக்கம், சேவை நீட்டிப்பு மற்றும் புதிய நிறுத்தங்களை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜூலை 19) காலை 10 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி எ. மகரிபா பர்வின் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கின்றனர்.

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயில், ஜூலை 20 முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 22.50 மணிக்கு புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 19.35 மணிக்கு புறப்பட்டு சனி மற்றும் திங்கட் கிழமை காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE