சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.கோட்டீஸ்வர் சிங் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆர்.மகாதேவன், என்.கோட்டீஸ்வர் சிங் விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளனர். இந்த இருவரின் நியமனம் மூலம், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

மணிப்பூரில் இருந்து முதல் நபர்.. இதற்கிடையே, இந்த நியமனம் மூலம் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் மணிப்பூரில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தலைமை நீதிபதியாக இருக்கும் கோட்டீஸ்வர் சிங்கின் சொந்த ஊர் மணிப்பூர். இவர் மணிப்பூரின் முதல் அட்வகேட் ஜெனரல் இபோடோம்பி சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரோரி மால் கல்லூரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற நீதிபதி கோட்டீஸ்வர் சிங், 1986-ல் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். அவர் நீதிபதி ஆவதற்கு முன்பு மணிப்பூர் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றியுள்ளார்.

9,000+ வழக்குகள்.. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர்.மகாதேவன் கடந்த 1963-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதியன்று பிறந்தவர். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1989-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஆர். மகாதேவன், தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க, பழமையான கோயில்கள், புராதன சின்னங்கள், கோயில் நகைகள் பாதுகாப்பு, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் 75 கட்டளைகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE