ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவு: விருந்தினர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கை கடிகாரங்கள் பரிசு

By செய்திப்பிரிவு

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு ரூ.5,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. கடந்த ஓராண்டாகவே திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள், சடங்குகள் நடைபெற்று வந்தன. கடந்த ஒரு மாதமாக பல்வேறு ஆடம்பர நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன.

இந்நிலையில், ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு அவரது தாய் நீடா அம்பானி ரூ.500 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அணிந்து வந்தார். உலகிலேயே விலை மதிப்புள்ள பொருட்களில் அந்த நெக்லஸும் ஒன்று என்று கூறப்படுகிறது. சுலோகா அம்பானியும் (ஆகாஷ் அம்பானியின் மனைவி) இதேபோன்ற நெக்லஸ் அணிந்திருந்தார்.

மணமகன் ஆனந்த் அம்பானி திருமணத்தின் போது கையில் கட்டியிருந்த பதேக் பிலிப்பி கடிகாரத்தின் விலை மட்டும் ரூ.67.5 கோடி என்றுதெரியவந்துள்ளது. தவிர திருமணத்தில்பங்கேற்ற தனது நண்பர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கை கடிகாரத்தை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கி உள்ளார். அவர்களில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங், விக்கி கவுஷல் உட்பட பலர் அடங்குவர். தவிர விலை உயர்ந்த லூயிஸ் உய்ட்டன் பைகள், தங்க சங்கிலிகள், விலை உயர்ந்த காலணிகள் போன்ற பொருட்களும் விருந்தினர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

திருமணத்தில் பங்கேற்ற அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்திய கார்கள், உடைகள், ஆபரணங்கள், காலணிகள், கைப் பைகள் என ஒவ்வொன்றும் விலை உயர்ந்த பொருட்களாகவே இருந்தன. சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகளையே அவர்கள்பயன்படுத்தினர்.

திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் இருந்து திருமணம் முடியும் வரை செலவிடப்பட்ட தொகை ரூ.5,000 கோடியை தாண்டி விட்டதாக கூறுகின்றனர். இது இங்கிலாந்து இளவரசி டயானா - இளவரசர் சார்லஸ்திருமணத்துக்கு ஆன செலவை விட (163 மில்லியன் டாலர்) அதிகம் என்கின்றனர். இதில் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் 300 மில்லியன் டாலர் தொகை செலவிடப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

தவிர உலகளவில் பிரபலமாக உள்ளரிஹானா, ஜஸ்டின் பீபர் போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இப்போது மிக பிரம்மாண்டமாக, ஆடம்பரமாக ஆனந்த் அம்பானியின் திருமணம் முடிந்து விட்டது. இத்துடன் முடிந்தது என்று யாரும்நினைத்து விடக்கூடாது. திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளைப் போலவே, திருமணத்துக்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் லண்டனில் நடைபெற உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்று அம்பானி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE