காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அடக்குமுறைகள்: நேரு காலம் முதல் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டது பாஜக

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ஒவ்வொரு ஆண்டும் அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த அறிவிப்பை காங்கிரஸ் மட்டுமின்றி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுதன்ஷு திரிவேதி டெல்லியில் கூறியதாவது:

அவசர நிலை காலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டன. காவல்துறையால் மக்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் சட்ட நிவாரணம் பெறமுடியாது. இந்திரா காந்தி அரசை விமர்சிக்கும் எவரும் சிறையில் அடைக்கப்படும் அபாயம் இருந்தது. இந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சியினர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுமார் 1.5 லட்சம் சாதாரண மக்கள் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசின் முடிவை மறுஆய்வு செய்யும் நீதிமன்ற உரிமை 38-வது, 39-வதுஅரசியல் சட்ட திருத்தம் மூலம் ரத்துசெய்யப்பட்டது. அரசியல் சாசன முகவுரை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்திய வரலாற்றில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட ஒரே பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே. தேர்தல் முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரை தண்டித்தது, இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு உச்ச நீதிமன்றம் அவரது எம்.பி. பதவியை திரும்ப வழங்கினாலும் அவரால் எம்.பி.யாக பணியாற்ற முடியாது. அவர் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட முடியாது. மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது, எனவே அவர் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதன் மூலம் பிரதமரின் எந்த முடிவு குறித்தும் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க முடியாது.

கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முதல் அரசியலமைப்பு திருத்தம் 1951 தேர்தலுக்கு முன்ஜவஹர்லால் நேருவின் அரசாங்கத்தால் செய்யப்பட்டது, இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அம்பேத்கர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

பண்டிட் நேரு பணியாற்றும் விதத்தை ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக கவிஞர் மஜ்ரூஹ் சுல்தான்புரி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டபோது அரசியலமைப்பு சட்ட படுகொலை நடந்தது. காங்கிரஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்ததால் பாடகர் கிஷோர் குமாரின் பாடல்கள் அகிலஇந்திய வானொலியில் தடை செய்யப்பட்டபோது அரசியலைப்பு சட்ட படுகொலை நடந்தது. 1980-ல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநில அரசுகளும் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. இவ்வாறு சுதன்ஷு திரிவேதி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE