பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை எட்டியது: எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி முதலிடம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அனைத்து சமூக வலைதளங்களிலும் பிரபலமாக உள்ளார். அவருடைய யூடியூபில் சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதன்மூலம் யூடியூப் சமூக வலைதளத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். பேஸ்புக், வாட்ஸ்அப் சேனல், இன்ஸ்டாகிராமிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்த சூழலில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளது. இதன்மூலம் எக்ஸ் தளத்தில் செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, எக்ஸ் தளத்தில் 3.81 கோடி பேர் பின்தொடர்கின்றனர். துபாய் மன்னர் ஷேக் முகமதுவை 1.12 கோடி பேரும், கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸை 1.85 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை எக்ஸ் தளத்தில் 2.64 கோடி பேரும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை 2.75 கோடி பேரும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை 1.99 கோடி பேரும், மேற்குவங்க முதல்வர் மம்தாவை 74 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 6.41 கோடி பேரும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரை 6.36 கோடி பேரும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லீபிரோன் ஜேம்ஸை 5.29 கோடி பேரும், அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்டை 9.53 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவில், “எக்ஸ் தளத்தில் 10 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இந்த தளத்தில் விவாதம், கருத்துகள், மக்களின் ஆசீர்வாதங்கள், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவை வருங்காலத்திலும் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும்எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை 3 கோடி பேர் புதிதாக பின்தொடர்ந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE