மும்பையில் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரால் மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் வெள்ள நீர் தேக்கத்தால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளையும் சூழ்ந்த வெள்ளநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்திய வானிலை மையத்தால் மும்பைக்கு இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடுத்த 3 - 4 மணிநேரங்களில் மும்பையின் நகர் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளன.

விமான சேவையில் சுணக்கம்: கனமழைக்கு மத்தியில் மும்பை நகரில் கரு மேகங்கள் சூழ்ந்து இருப்பதால், மும்பை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேக்கத்தால் மும்பை விமான நிலைய செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. இதனால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு மாற்று நேரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் தேக்கம்: கடந்த 24 மணி நேரத்தில், 93.16 மி.மீ என்ற அளவில் மும்பை நகரில் சராசரி மழைப்பொழிவு இருந்துள்ளது. இதன்காரணமாக செம்பூர், பி டி மெல்லோ ரோடு, ஏபிஎம்சி மார்க்கெட், டர்பே மாஃப்கோ மார்க்கெட், கிங்ஸ் சர்க்கிள் போன்ற பகுதிகளில் மழைநீர் கடுமையாக தேங்கியது. இந்த இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குடியிருப்புகளையும் சூழ்ந்த வெள்ளநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதேபோல் சாலைகளிலும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியிருப்பதால், மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே, தென்மேற்கு பருவமழையுடன் தொடர்புடைய மேற்குக் காற்று படிப்படியாக வலுவடைந்து வருவதால் மும்பை மட்டுமில்லமல் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 4-5 நாட்களில் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும், இது இடியுடன் கூடிய கனமழையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE