டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என்றுகூறி உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஜூலை 12) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதில்தான் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. அமலாக்கத் துறையின் பல்வேறு சம்மன்களை நிகராகரித்த பின்னர் கடந்த மார்ச் 21-ம் தேதி கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேஜ்ரிவால், அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கியது.

அதன்படி, தீர்ப்பின்போது நீதிபதிகள், “90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் துயரப்பட்டிருக்கிறார். பிணையில் ஒருவர் வெளியில் வருவதற்கும், அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பிணை கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேவைப்பட்டால் அமலாக்கத் துறை கேஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்ளலாம்.

வெறும் விசாரணைக்காக மட்டும் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். அதனை நாங்கள் நம்புகிறோம்.

கேஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கென்று சில உரிமைகள் உள்ளன. அப்படிப்பட்டவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்.” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டப்பிரிவு 19ன் படி கைது செய்யப்பட்டது தவறானது என்று அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்தும், மதுபான கொள்கை ஊழல் நிதியை தேர்தலுக்கு பயன்படுத்தினால் என்ற அமலாக்கத் துறையின் புகார் குறித்தும் விரிவான அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE