பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் விடுப்பு

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அலுவலக எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தங்கள் பெற்றோர் மற்றும் தனது வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக, மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். அதேநேரம், இந்த விடுப்பை வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்கவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக தனிப்பட்ட கொண்டாட்டத்துக்காக பயன்படுத்தக் கூடாது. வரும் நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இதற்கு நடுவே, 7-ம் தேதி சத் பூஜை, 9-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக 5 நாட்கள் பெற்றோருடன் செலவிட வேண்டும்.

அத்தியாவசிய சேவை துறைகளைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் வேறு நாட்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். பெற்றோர் இல்லாதவர்கள் இந்த விடுமுறையை அனுபவிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE