த‌மிழகத்துக்கு 1 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

By இரா.வினோத்


புதுடெல்லி: தமிழகத்துக்கு 1 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் நேரடியாக கலந்து கொண்டார். ஒழுங்காற்று குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனப்பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர்இருப்பு, நீர்வரத்து மற்றும் மழைப் பொழிவின் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசின் தரப்பில் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் திறக்கவேண்டிய நீரை திறந்துவிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பான நீரையும் திறந்துவிடுவதில்லை. இந்த நீர் எல்லையில் உள்ள பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் இந்தஆண்டில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை முழுமையாக திறக்க பரிந்துரை செய்ய வேண்டும்” என வலியுறுத்த‌ப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசின் தரப்பில் கூறும்போது, “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த ஆண்டில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை9-ம் தேதி வரை கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளுக்கும் 41.650டிஎம்சி நீர் வந்துள்ளது. 4 அணைகளிலும் சேர்த்து 58.668 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு மழை அதிகமாக பெய்யும் காலத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 28 சதவீதம் குறைவாகவே மழை பொழிந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தாபேசும்போது, “கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் 1 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE