கடும் முதுகுவலி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடும் முதுகுவலி காரணமாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையான முதுகுவலி ஏற்பட்டதால் நேற்று (ஜூலை 10) இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை தனி வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை நிபுணர் அமோல் ரஹேஜாவின் நேரடி கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆந்திராவில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோதும், இதே போல கடுமையான முதுகுவலியால் ராஜ்நாத் சிங் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றைய தினம் தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE