மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) அங்கம் வகிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக தருவதை உத்தரவாதமாக்கும் வகையிலான அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய ஓய்வூதிய முறை கடந்த 2003-ம் ஆண்டு கைடவிடப்பட்டது. அதற்கு பதிலாக, ஊழியர்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய ஓய்வூதிய திட்டம் 2004—ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. அந்த ஆண்டிலிருந்து மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இது வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமாகும்.

இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்தை என்பிஎஸ் திட்டத்துக்காக பங்களிக்கிறார்கள். இதில், அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆராய நிதிச் செயலர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்புவது சாத்தியமில்லை என்றுமத்திய அரசு ஏற்கெனவே நிராகரித்த போதிலும், என்பிஎஸ் திட்டத்தின் மூலம் ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், என்பிஎஸ் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் இதுகுறித்து நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 ஆண்டு முதலீடு: 25-30 ஆண்டுகள் இந்த திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்துள்ள ஊழியர்கள் பழைய ஓய்வூதியதாரர்களுடன் ஒப்பிடும்போது திருப்திகரமான வருமானத்தை பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், 20 ஆண்டுகள் அல்லது இத்திட்டத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு மட்டுமே குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE