ஹேமந்த் சோரன் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அமலாக்கத் துறை மனு தாக்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைதாவதற்கு முன்னதாகவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது அரசில் அமைச்சராக பதவி வகித்து வந்த சம்பாய் சோரன், புதிய முதல்வராகத் தேர்வானார்.

இதனிடையே, சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த சோரனுக்குகடந்த மாதம் 28-ம் தேதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வந்த அவர் மீண்டும் முதல்வராக விரும்பினார். இதற்கு வசதியாக முதல்வர் பதவியை சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து ஜார்க்கண் டின் 13-வது முதல்வராக ஹேமந்த்சோரன் கடந்த 4-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். மேலும், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் தற்போதைய உறுப்பினர் எண் ணிக்கை 76 ஆகும். இதில் 45 உறுப்பினர்கள் ஹேமந்த் சோரன் அரசை ஆதரித்து வாக்களித்தனர். இதன் மூலம் அவரது அரசு வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றஉத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். முதல்வர் சோரனுக்கு ஜாமீன் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஆராயவில்லை. எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE