மும்பை: மும்பையில் ஒரே நாளில் 30 செ.மீ. மழை கொட்டியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 செ. மீட்டர் மழை பெய்தது. இது கடந்த 2005-ம் ஆண்டுக்குப்பின் பெய்தஇரண்டாவது மிகப் பெரிய மழைப்பொழிவு ஆகும். இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் இந்தூர், ஹைதராபாத், அகமதபாத்போன்ற இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டது. வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில் மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சூழல் காரணமாக வடக்கு ஆந்திர கடலோர பகுதி, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மாஹே, ஏனாம், கர்நாடகாவின் உள்பகுதி ஆகிய இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக மும்பையில் வர்த்தக ரீதியாக மிகப் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கரோனா தொற்று காலத்திலிருந்தே வங்கிகள் உட்பட பல சேவைகள் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், வர்த்தக நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்புஏற்படவில்லை என எச்டிஎப்சி வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் சாக்ஷி குப்தா தெரிவித்தார்.