பிரபல பாப் பாடகர் உஷா உதுப் கணவர் காலமானார்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிரபல பாப் பாடகர் உஷா உதுப்பின் கணவர் ஜானி ஜாக்கோ மாரடைப்பு காரணமாக நேற்று (திங்கள்கிழமை) காலமானார். அவருக்கு வயது 78. ஜானியின் இறுதிச்சடங்கு கொல்கத்தாவில் ஜெய்ரோடாலாவில் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது.

உஷா உதுப் கொல்கத்தாவில் பாலிகஞ்ச் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (திங்கள் கிழமை) காலை வழக்கம்போல் அவர் வீட்டில் தன் கணவர் ஜானியுடன் உணவருந்தியுள்ளார். பிறகு வேலை நிமித்தமாக உஷா உதுப் மட்டும் வெளியில் கிளம்பிச் சென்றுள்ளார். சிறிது நேரத்திலேயே அவரது கணவர் ஜானிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஜானி ஜாக்கோவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ஜானியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஜானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜானியின் மறைவை ஒட்டி உஷா உதுப்புக்கு திரைப் பிரபலங்கள் பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். மும்பைவாழ் தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்த உஷா கடந்த 1969-ல் சென்னையிலிருந்து தனது மேடைப் பாடல்களை தொடங்கினார். உஷாவை ஜானி ஜாக்கோ 1960 இல் முதன்முறையாக கொல்கத்தாவில் சந்தித்துள்ளார். அப்போது அந்நகரில் உஷா உதுப் பாப் பாடகராக பணியாற்றி வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு அஞ்சலி மற்றும் சன்னி என இருகுழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளின் திரைப்படங்களிலும் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.

தமது இசை உலகின் சாதனைக்காக சமீபத்தில் உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE