நாடு முழுவதும் கட்டிட ஒப்பந்ததாரர் - வீடு வாங்குவோர் இடையே ஒரே சீரான ஒப்பந்தம் கொண்டுவர நீதிமன்றம் பரிந்துரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் 2020-ல் தாக்கல்செய்த பொதுநல வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று கூறியதாவது: வீடு வாங்குவோர் மீது கட்டிட ஒப்பந்ததாரர்கள் என்னென்ன விதிகளை சுமத்துகிறார்கள் என்பதில் தெளிவான வரையறை இருக்க வேண்டும். அவர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் நாடு முழுவதும் ஒரே சீரான வகையில் அமைவது அவசியம். இல்லையெனில், வீடு வாங்குவோர் பில்டர்களால் ஏமாற்றப்படுவது தொடரும். இவ்வாறு அமர்வு தெரிவித்தது.

இந்த மனு மீதான விசாரணையின்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவாஷிஷ் பாருகா, மாநில அரசுகளின் பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி நிலை அறிக்கை மற்றும் பில்டர்-வீடு வாங்குவோர் இடையேயான வரைவு ஒப்பந்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

19-ம் தேதி மீண்டும் விசாரணை: இருப்பினும், அதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்திய நீதிமன்ற அமர்வு,இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) எழுப்பிய ஆட்சேபனைகளையும் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 19-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE