புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு சிறந்த முறையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் அரசு பயணமாக அவர் இன்று ரஷ்யா பயணிக்கிறார். இந்தச் சூழலில் அவரது இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
“கடந்த பத்து ஆண்டு காலத்தில் இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. முதலீடு, கல்வி, சுகாதாரம், வர்த்தகம், கலாச்சாரம், சுற்றுலா என பல்வேறு துறைகளில் இருதரப்புக்கும் இடையிலான உறவு வலு பெற்றுள்ளது.
இந்த பயணத்தில் எனது நண்பரும், ரஷ்ய அதிபருமான புதின் உடன் பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச உள்ளேன். இந்தியா - ரஷ்யா இடையிலான இணக்கம் சார்ந்த அனைத்து அம்சங்கள் குறித்தும் பேச உள்ளேன். ரஷ்யாவில் வசித்து வரும் இந்தியர்களை சந்திக்கவும் ஆவலுடன் உள்ளேன்.
தொடர்ந்து ஆஸ்திரிய பயணத்தில் அதிபர் அலெக்சாண்டரை சந்திக்க உள்ளேன். இருதரப்பும் ஆதாயம் அடையும் வகையில் தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீடு வாய்ப்பையும் எதிர்நோக்கி உள்ளேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
» சேதி தெரியுமா? : இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது முதல் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் வரை
» பாகிஸ்தான் பங்குச் சந்தையில் தீ விபத்து: வர்த்தகம் நிறுத்தம்
இந்திய - ரஷ்ய உச்சி மாநாடு: ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றார். இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக ரஷ்யாவுக்கு அவர் செல்கிறார். தற்போதைய சூழலில் இந்திய பிரதமரின் ரஷ்ய பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தின் போது பிராந்திய, சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள். பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு மதிய விருந்து அளிக்க உள்ளார். ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாஸ்கோவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.