ஹரியாணாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 மாணவர்கள் காயம்

By செய்திப்பிரிவு

பஞ்ச்குலா: ஹரியாணா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சுமார் 40 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பஞ்ச்குலாவில் உள்ள பிஞ்சூருக்கு அருகே நடைபெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய பேருந்து ஹரியாணா மாநில அரசுப் பேருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்துள்ளது. அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதாக தகவல்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை ஹரியாணா மாநில சாலை போக்குவரத்து பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதில் பேருந்து ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார். நடத்துநர் காயமடைந்துள்ளார். மேலும், இதில் காயமடைந்த ஒரு பெண் சண்டிகரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE