குல்காம் துப்பாக்கிச் சூடு: 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 2 வீரர்கள் வீரமரணம்

By செய்திப்பிரிவு

குல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தீவிரவாதிகளின் உடல்களை மீட்டுள்ளனர்.
இதன்மூலம் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 பேர் தீவிரவாதிகள்.

குல்காம் தாக்குதல் குறித்து அதிகாரிகள் தரப்பில், “மோடர்காமில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து நான்கு தீவிரவாதிகளின் உடல்களும், சின்னிகாம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயரடுக்கு பாரா கம்மாண்டோ வீரர் உட்பட இரண்டு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஆர்.ஆர்.ஸ்வைன குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுதினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குல்காம் மாவட்டத்தின் இரண்டு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வருகிறது. இதில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சந்தேகம் இல்லாமல் பாதுகாப்பு படையினருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்தான். பாதுகாப்புச் சூழலை வலுப்படுத்துவதில் இது ஒரு மைல்கல். தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர மக்கள் ஒன்றிணைகிறார்கள், நடவடிக்கைகள் வேகம் பெறுகின்றன. தற்போதைய நடவடிக்கை இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் மோடர்காம் பகுதியில் சனிக்கிழமை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பிரிசல் சின்னிகாம் பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் பிரிசல் சின்னிகாம் பகுதியில் நடந்த தீவிரவாதிகளைச் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்ட போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபாகர் ஜான்ஜலின் இறுதிச் சடங்குகள், மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் வைத்து ஜூலை 8-ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE