‘ஹாத்ரஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்’ - யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம்

By செய்திப்பிரிவு

லக்னோ: ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஜூலை 6-ம் தேதியிடப்பட்ட அந்த கடிதத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகிர்ந்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரங்களை விளக்கியுள்ள ராகுல் காந்தி, இழப்பீட்டுத் தொகையை உயர்ந்தி விரைவாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஹாத்ரஸ் மற்றும் அலிகார் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை சென்றதைப் பற்றிக் குறிப்பிடுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தான் பேசும்போது அவர்கள் சந்தித்துள்ள இழப்புக்கு தற்போதைய இழப்பீட்டுத் தொகை போதுமானதகாக இருக்காது என்று தெரிவித்தனர்.

121 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஹாத்ரஸ் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடுகளை அறிய நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உதவும். அந்த சம்வபத்துக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தேவைப்படும் எந்த உதவிகளையும் செய்வதற்கு காங்கிரஸ் தொண்டர்களும் தயாராக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேசம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அந்தச் சம்பவம் குறித்தும் அவர்களுக்கு கிடைத்த உதவிகள் பற்றியும் கேட்டறிந்தார். இதுகுறித்து உரிய இடத்தில் பேசுவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிர்வாகத்தின் பக்கம் எங்கோ குறைபாடு உள்ளது. அதுவே இவ்வளவு பெரிய சோகத்துக்கு வழிவகுத்துள்ளது. 80,000 பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில் இவ்வளவு பேர் எப்படி அங்கு கூடினார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம்: உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீஸார், பாரதிய நியாயசன்ஹிதா சட்டத்தின் பிரிவான மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுக்கர் என்பவர் தலைமறைவானார்.

அவர், டெல்லியின் உத்தம்நகரின் நஜப்கார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக உ.பி. போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு சென்ற போலீஸார், தேவபிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவரை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனிடையே, உத்தரப் பிரதேச அரசு ஹாத்ரஸ் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்தினை புதன்கிழமை அமைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE