“போலே பாபா எனது கணவர்” - ஆக்ரா பெண்ணின் கண்மூடித்தன பக்தியால் சிதைந்த குடும்பம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண் போலே பாபாதான் தனது கணவர் எனத் தெரிவித்துள்ளார். 4 குழந்தைகளுக்கு தாயான இந்தப் பெண்ணின் கண்மூடித்தனமான பக்தியால் தாலிகட்டிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உ.பி.,யின் ஹாத்ரஸ் மாவட்ட சிக்கந்தராராவ் தாலுகாவின் கிராமத்தில் நெரிசல் சம்பவம் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவின் கூட்டத்துக்கு 1.25 லட்சம் பேர் வந்திருந்தனர். இதில் 112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர் பலியாகி வழக்குகள் பதிவாகி உள்ளன. அப்போது முதல் இந்த போலே பாபா குறித்த பல்வேறுச் சர்ச்சைகள் வெளியானபடி உள்ளன.

ஆக்ராவின் ஜி.ஆர் மருத்துவமனையில் நாரயண்சிங் என்பவர் உடல்நலம் குன்றி சிகிச்சையில் உள்ளார். தனியார் பள்ளியின் ஆசிரியரான இவர், காதல் திருமணம் புரிந்துள்ளார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், போலே பாபாவால் இவர்களது சுகவாழ்க்கையில் புயல் வீசியுள்ளது. 10 வருடங்களுக்கு முன் தம் பகுதியில் வாழும் பெண்களுடன் போலே பாபாவின் கூட்டத்திற்கு சென்றுள்ளார் நாரயணின் மனைவி.

இதன் பிறகு நடந்தவற்றை ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மருத்துவ சிகிச்சையிலிருந்தபடி நாரயண்சிங் கூறுகையில், ‘முதல் கூட்டத்திலிருந்து போலே பாபாவின் மீது எனது மனைவிக்கு பக்தி அதிகரிக்கத் துவங்கியது. இவர்போன்ற பாபாக்கள் போலியானவர்கள், இவர்களிடம் எந்த சக்தியும் கிடையாது என எடுத்துக் கூறியும் பலனில்லை. சில மாதங்களுக்கு முன் போலே பாபாதான் எனது மானசீகக் கணவர் எனக் கூறிவிட்டார்.

இதனால், தொடர்ந்து எங்கள் குடும்பத்தில் அன்றாடம் பிரச்சினை. இந்த போலே பாபாவால் எனது குடும்பவாழ்க்கையே நாசமாகி விட்டது. எனக்கு தம்முடன் எந்த சம்மமும் இல்லை எனவும், உண்மையானக் கணவர் போலே பாபாவுடன் தான் வாழ்வதாகக் கூறினார் என் மனைவி. பாபாவின் படத்தை வைத்து 10 வருடங்களாகப் பூஜித்து வருகிறார். இதன் காரணமாக எனக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் குன்றி விட்டது. நான் இப்போது சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த பாபாவால் நாசமான எனது வாழ்க்கை நலம்பெறுமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது.” எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பட்டியாலி கிராமத்தைச் சேர்ந்தவர் போலே பாபா. உ.பி. காவல்துறையில் சாதாரணக் காவலராக பணியாற்றியவர். பாபா மீதான வழக்குகளால் சிறையில் அடைக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். பிறகு வழக்கில் சாட்சிகள் இன்றி நிரபராதியாக விடுதலையானவர், நாரயண் சாக்கா விஷ்வ ஹரி எனப் பெயரை மாற்றி ஆன்மிகப் பிரச்சாரத்தில் இறங்கினார்.

இதில் குறிப்பாக குடும்பப் பெண்களை குறிவைத்து தனது ஏஜெண்டுகள் மூலமாக அவர்களை தன் கூட்டங்களுக்கு வரவழைத்தார். இந்த ஏஜெண்ட் பணியிலும் அதிகமாகப் பெண்களையே பாபா நியமித்தார். இவர்கள் உ.பி. கிராமங்களின் பட்டியலின மற்றும் பிறபடுத்தப்பட்ட சமூகத்தினருக்கு தம் வலைகளை விரித்தனர். தற்போது இதில் பல லட்சம் பேர் பக்தர்களாகச் சிக்கி பாபாவை கடவுளாகவே போற்றி வருகின்றனர்.

இவருக்கு பிரேம் பதி என்பவருடன் மணமாகி அவரும் பாபாவுடன் அமர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். பாபாவின் பக்தர்களால் மாதாஸ்ரீ என அழைக்கப்படுபவருக்கு குழந்தைகள் கிடையாது. கடந்த ஜுலை 2 இல் 121 உயிர்கள் பலியாகி விட்டாலும் பாபா மீது இதுவரை ஒருவர்கூட புகார் செய்ய முன்வரவில்லை. நாட்டையே உலுக்கிய இந்த நெரிசல் சம்பவத்திற்கு பிறகு பாபா மீது உ.பி காவல்துறையும் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE