ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்து இந்தியா புதிய மைல்கற்களைக் கடந்து வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுயச்சார்பு இந்தியாவை உருவாக்கும் (ஆத்ம நிர்பார் பாரத்) நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெற்றிகரமாக பல கொள்கைகளையும் திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில், 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை இல்லாத வகையில் வளர்ச்சி கண்டுள்ளது.

பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் பிற பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்றப்பட்ட தரவுகளின்படி 2023-24 நிதியாண்டில் ரூ. 1,26,887 கோடி மதிப்புக்கு ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிடவும் 16.7 சதவீதம் அதிகமாகும்.

2023-24 நிதியாண்டின் உள்நாட்டு ஆயுதங்களின் மொத்த உற்பத்தியில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் 79.2 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளன. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 20.8 சதவீதமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் மேக் இன் இந்தியா திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதிய மைல்கற்களைக் கடந்து வருகிறது. பாதுகாப்பு ஆயுதங்கள் உற்பத்தியில் இதுவரை காணாத வளர்ச்சியை 2023-24 நிதியாண்டில் இந்தியா கண்டுள்ளது. தளவாடங்களின் உற்பத்தி ரூ.1,26,887 கோடியை எட்டியிருப்பது கடந்த நிதியாண்டை விடவும் 16.7 % கூடுதலாகும். பாதுகாப்பு தளவாடங்களுக்கான உலகளாவிய உற்பத்தி சந்தையாக இந்தியாவை வளர்க்கும் முனைப்பில் இந்திய அரசு செயலாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் பாராட்டு: இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாராட்டுத் தெரிவித்தார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘நம்முடைய பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள், தளவாட உற்பத்தி சார்ந்த ஏனைய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

இந்தியாவை உலகின் ராணுவத் தளவாட உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுமத்திய அரசு புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது”என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE