ஆளுநர் vs சபாநாயகர்: மேற்கு வங்கத்தில் எம்எல்ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரம் யாருக்கு?

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் மற்றும் சபாநாயகர் இடையேயான மோதலால் இடைத்தேர்தலில் வென்ற இருவர் எம்எல்ஏ-வாக பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக இருந்த இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயத் உசேன், சயாந்திகா பந்தோபாதியா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து அவர்கள் எம்எல்ஏ-வாக பதவியேற்க அழைப்புக்கு காத்திருந்தனர். இந்த நிலையில் எம்எல்ஏ-வாக பதவிப் பிரமாணம் செய்துவைப்பதில் மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் அம்மாநில சபாநாயகர் இடையே போட்டி உருவாகியுள்ளது.

எம்எல்ஏ-வாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தனக்கு தான் அதிகாரம் இருப்பதாக ஆளுநர் ஆனந்த போஸும், சபாநாயகர் பீமன் பானர்ஜியும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆளுநர் ஆனந்த போஸ், வெற்றிபெற்ற இருவரையும் எம்எல்ஏக்களாக பதவியேற்க ராஜ் பவனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், இருவருமே ராஜ் பவன் சென்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டனர். மாறாக, ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்து பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என பேரவை வளாகத்தில் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராஜ் பவனுக்கு செல்லாதது ஏன் என்பது தொடர்பாக பேசியுள்ள பாராநகர் தொகுதியில் வெற்றிபெற்ற சயாந்திகா பந்தோபாதியா, "ராஜ்பவன் பெண் ஊழியர் ஒருவர் ஆளுநருக்கு எதிராக பாலியல் தொல்லை புகார் கொடுத்திருக்கிறார். எனவே ராஜ் பவன் செல்ல பயமாக உள்ளது. ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்துவைக்க அனுமதிக்க வேண்டும்" என்று கூறி போராட்டம் நடத்தி வருகிறார்.

ராஜ்பவனில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதனை காரணம் காட்டி தற்போது இருவரும் ராஜ்பவன் செல்ல மறுத்துள்ளனர்.

இதற்கிடையே பதவியேற்பு தொடர்பாக ஆளுநர் ஆனந்த போஸ் தரப்பு வெளியிட்டுள்ள விளக்கத்தில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பு படியும், அரசியல் சாசனத்தின்படியும் ஆளுநருக்கே எம்எல்ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க அதிகாரம் உள்ளது. அல்லது நான் சொல்லும் நபர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியும். சட்டமன்றத்தில் மூத்த பட்டியலின அல்லது பழங்குடியின எம்எல்ஏ-வை கொண்டு பதவிப்பிரமாணம் செய்து வைக்க அனுமதிக்கிறேன். இதை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை.

சட்டமன்றத்துக்கு சென்று பதவி பிரமாணம் செய்து வைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், ஆளுநரின் மாண்பை குறைக்கும் வகையில் சபாநாயகர் கடிதம் எழுதி வருகிறார். இதனை ஏற்க முடியவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக எம்எல்ஏ-க்கள் பதவியேற்பதில் திரிசங்கு நிலை நீடித்து வருகிறது. தற்போது ஆளுநர் தரப்பும், சபாநாயகர் தரப்பும் சட்ட உதவிகளை நாடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE