மகாராஷ்டிராவில் சோகத்தில் முடிந்த கார் சாகசம்: மலை உச்சியிலிருந்து விழுந்து பெண் பலி

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கார் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது 23 வயது இளம்பெண் ஒருவர் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திய காரணத்தால் மலையின் உச்சியில் இருந்து கார் பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இதில் அந்தப் பெண் உயரிழந்துள்ளார். காரை அவர் ஓட்டிப் பார்த்து பழகியபோது இந்த சோகம் நேர்ந்துள்ளது.

திங்கட்கிழமை அன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியின் சுலிபஞ்சன் மலை பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. ஸ்வேதா எனும் அந்தப் பெண்ணுக்கு கார் ஓட்டி பழக வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது. அதன்படி அவர் முதல்முறையாக காரை ஓட்டிப் பழகியுள்ளார். அப்போது தான் இந்த துயரம் நடந்துள்ளது. அவரது நண்பர் சிவ்ராஜ், ஸ்வேதா கார் ஓட்டுவதை வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டது. அதில் வெள்ளை நிற செடான் மாடல் காரை நிதானமாக பின்னோக்கி செலுத்துகிறார் ஸ்வேதா. அதனை அவரது நண்பர் வீடியோ பதிவு செய்யும் பணியில் இருந்தார். அப்போது திடீரென ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்த கார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. கிளெட்சை அழுத்துமாறு சிவ்ராஜ் கூச்சலிடுகிறார். இருந்தும் கார் பள்ளத்தில் பாய்ந்தது.

அவரை அடையாளம் கண்டு மீட்டு வரவே சுமார் 1 மணி நேரம் ஆகியுள்ளது. பயங்கர காயங்களுடன் இருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE