ஜெகன் அரசால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

By என். மகேஷ்குமார்

அமராவதி: முந்தைய ஜெகன் அரசால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையும் வழங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆருத்ரா. இவருக்கு சாய்லட்சுமி சந்திரா எனும் மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். இவர்களுக்கு அமலாபுரம் எனும் இடத்தில் பூர்வீக சொத்து உள்ளது. இந்த சொத்துப் பிரச்சினைக்காக முந்தைய ஜெகன் ஆட்சியில் அமைச்சராக இருந்த தாடிஷெட்டி ராஜாவிடம்தாயும், மகளுடம் முறையிடச் சென்றனர். அப்போது இவர்களை அமைச்சர் தனது மெய்க்காவலர்களால் அடித்து விரட்டியுள்ளார். மேலும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் அமைச்சர் தரப்பில் குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரின் ஆட்கள் தாக்கியதில், ஏற்கெனவே நடக்க முடியாத நிலையில் இருந்த சாய்லட்சுமி சந்திராவின் முதுகுத் தண்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர் முற்றிலும் நடக்கமுடியாமல் சக்கர நாற்காலி உதவியுடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மாதம் ரூ.10 ஆயிரம் உதவி: இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தாயும் மகளும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காண கடந்த வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகம் வந்தனர். இவர்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் சந்திரபாபு, மாற்றுத் திறனாளி சாய்லட்சுமி சந்திராவுக்கு உடனடியாக ரூ.5 லட்சம் நிதி உதவியும், மாதம் ரூ.10,000 உதவித் தொகையும் வழங்க உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE