புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜகவால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆதரிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேச கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக யாரை பரிந்துரைக்கிறதோ அவரை நாங்கள் ஆதரிப்போம்” எனத் தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படலாம் என பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.சி. தியாகி, “கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை பாஜகதான் வழிநடத்துகிறது” எனத் தெரிவித்தார். இதன்மூலம், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்வாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.
18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
» “ஆணவம் கொண்டவர்கள் 241-ல் நிறுத்தப்பட்டுள்ளனர்” - ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்
» மேற்கு வங்க ஹிஜாப் சர்ச்சை | கல்லூரியில் மீண்டும் சேர விருப்பமில்லை: ஆசிரியர் சஞ்சிதா காதர்
மத்திய பட்ஜெட்டின்போது, மக்களின் கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் விவாதிப்போம் என்று கே.சி. தியாகி தெரிவித்தார். “நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறும். ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதியின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், பிரச்சினைகள் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள்” என கே.சி. தியாகி குறிப்பிட்டார்.