ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை குறித்து பிரதமர் மோடி ஆய்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில் கடந்த 9-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பக்தர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக கத்துவா மற்றும் தோடா பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்து பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் குறித்த முழு விவரங்கள் அவருக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு திறன்களின் முழு அளவையும் பயன்படுத்த வேண்டும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசிய பிரதமர், பாதுகாப்புப் படைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE