நாடாளுமன்ற முதல் கூட்டம் ஜூன் 24-ல் தொடக்கம்: புதிய எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் 24-ம்தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடரில், மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார்.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 3-வது முறையாக மோடி கடந்த 9-ம் தேதி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), 36 இணைஅமைச்சர்கள் என மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், 18-வது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

3 நாட்கள் பதவியேற்பு நிகழ்ச்சி: 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24 -ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத் தொடரின்போது, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். புதிய எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி முதல் 3 நாட்கள் நடைபெறும்.

27-ம் தேதி நாடாளுமன்ற 2 அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும். இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார்.

இதேபோல, மாநிலங்களவையின்264-வது அமர்வும் ஜூன் 27-ல் தொடங்கி,ஜூலை 3-ம் தேதி நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

5 ஆண்டுக்கான செயல் திட்டம்: குடியரசுத் தலைவரின் உரையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் உள்ளிட்டவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு பிறகு, மத்திய அமைச்சர்களை, பிரதமர் மோடி அவைக்கு அறிமுகம் செய்து வைப்பார். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெறும்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விவாதத்தின் முடிவில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றுவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE