குவைத் தீ விபத்து | உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யவும் வெளியுறவு அமைச்சர் குவைத் செல்ல உள்ளார்.

பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்” இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் மலையாள தொழிலதிபர் கேஜி ஆபிரகாமுக்கு சொந்தமான NBTC குழுமத்திற்கு சொந்தமானது. இன்று அதிகாலை, கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் ஏற்பட்ட தீ, மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இந்தக் கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதல்கட்ட தகவல்படி உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக 965-65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. அதே போல இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான, +91 1800 309 3793 (இந்தியாவுக்குகுள் ), +91 80 6900 9900, +91 80 6900 9901 (வெளிநாடு ) தொடர்பு கொள்ளலாம் என்று அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE