புவனேஸ்வர்: ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதன்மூலம், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பாஜக பெற்றது. அந்தக் கட்சி முதல்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக பாஜக-வால் அறிவிக்கப்பட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் இன்று புவனேஸ்வருக்கு வருகை தந்தனர்.
அவர்கள் இருவரும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய தலைவர்களை தனித்தனியே சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தனர். இதையடுத்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஒடிசா பழங்குடியினரின் முக்கிய முகமான மோகன் சரண் மாஜி, 4 முறை ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவின் 16-வது சட்டப் பேரவையில் கட்சியின் தலைமைக் கொறடாவாக செயல்பட்டுள்ளார்.
ஒடிசா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கே.வி.சிங் தியோ, மாநிலத்தின் மூத்த பாஜக தலைவராக இருப்பவர். 6 முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர். மற்றொரு துணை முதல்வரான பிரவாதி பரிதா, முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர். இவர் நிமாபாரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்பு விழா புதன்கிழமை மாலை 5 மணிக்கு புவனேஸ்வரின் ஜனதா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடுவும் புதன்கிழமை பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்வு விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அங்கிருந்து புவனேஸ்வருக்கு வருகை தந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசா பாஜக தலைவர் மன்மோகன் சமல் மற்றும் மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர், பதவி விலகும் முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அவர் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 mins ago
ஜோதிடம்
44 mins ago
ஜோதிடம்
52 mins ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago