ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு: துணை முதல்வராகிறார் பவன் கல்யாண்

By செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை அமராவதியில் பதவியேற்க உள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் நாளை சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்க உள்ளார். பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்ள், விஐபிக்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

ஜனசேனா வெற்றி: தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு. இவருக்கு வழங்கிய 21 பேரவை மற்றும் 2 மக்களவை தொகுதிகளிலும் தான் உட்பட தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெற செய்துள்ளார்.

இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி 164 தொகுதிகளை கைப்பற்றி ஜெகன் மோகன் ரெட்டி கட்சியை தோல்வியுற வைத்துள்ளது.

எனவே பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்முறை பாஜக, ஜனசேனா கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பதால் மெகா அமைச்சரவையாகஇருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியிலிருந்து விஜயவாடாவிற்கு விமானம் மூலம் வந்தார். அவர் வந்ததும், உண்டவல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று, அமைச்சர்கள், அமைச்சரவை குறித்து தனது கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடனும் இறுதியாக கலந் தாலோசனை நடத்தி, நாளை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

முதல்வராக பதவியேற்றதும், 12-ம் தேதி இரவு தனது குடும்பத்தாருடன் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு வர உள்ளார். பின்னர் இரவு திருமலையில் தங்கும் அவர், மறுநாள் 13-ம் தேதி காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE