புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் இருப்பவர் தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதா. இவர் மீது ரூ.100 கோடிக்கான முறைகேடு வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறையினர் பதிவு செய்து குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கவிதாவின் காவல் நேற்றோடு முடிவடைந்ததால் அவரை சிறை அதிகாரிகள் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கவிதாவுக்கு ஜாமீன் வழங்கும்பட்சத்தில், அவர் சாட்சிகளை அழிக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம், கவிதாவுக்கு வரும் 21-ம் தேதிவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டிப்பதாக உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கவிதா மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.