தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி: பாஜக கூட்டணி அரசு ஜூன் 9-ல் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் அறுதி பெரும்பான்மையை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக 240 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜகவின் 14 கூட்டணி கட்சிகளிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். குறிப்பாக, தெலுங்கு தேசத்திடம் 16, ஐக்கிய ஜனதா தளத்திடம் 12 எம்.பி.க்கள் உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணி கட்சி தலைவர்கள் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டணி கட்சிகளின் மக்களவை குழு தலைவராக இக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் மோடி, ஆதரவு எம்.பி.க்கள் பட்டியலை அவரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்குகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பாஜககூட்டணி அரசு பதவியேற்க உள்ளது.தொடர்ந்து 3-வது முறை பிரதமராகநரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். அவரோடு முக்கிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசண்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், பூடான் பிரதமர் தாஷோஷெரிங் டோப்கே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ல் பிரதமர் மோடி முதல்முறையாக பதவியேற்ற போது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விழாவில் பங்கேற்றார். புல்வாமா தாக்குதல் காரணமாக இரு நாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதனால், கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல, தற்போதும் அழைப்பு விடுக்கவில்லை.

அமைச்சரவையில் யார் யார்? - பாஜக மூத்த தலைவர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோருக்கு மீண்டும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலில் தோற்றபோதிலும் ஸ்மிருதி இரானி, ராஜீவ் சந்திரசேகருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. அமைச்சரவையில் 40 புதிய முகங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதான கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் 5 அமைச்சர் பதவிகள் மற்றும் மக்களவை தலைவர் பதவியை கோருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளம் 3, சிராக் பாஸ்வான் தரப்பு 2, ஜிதன்ராம் மாஞ்சி தரப்பு 2, சிவசேனா ஷிண்டேஅணி 2 அமைச்சர் பதவிகளை கோரி வருகின்றன. நிதித் துறை அல்லது அதில் இணை அமைச்சர் பதவியை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 2 கட்சிகளும் கேட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால், அந்த மாநில மக்களின் நம்பிக்கையை பெற, மகாராஷ்டிராவை சேர்ந்த 6 பேர் மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பதவியேற்பு, அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அமைச்சரவையில் திறமையானவர்களை நியமிப்பது, கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வது, அதே நேரம், பாஜகவின் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் செயல்படுவது என இதில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது.

மோடிக்கு பைடன், புதின், சுனக் வாழ்த்து: பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, தென்கொரிய அதிபர் யுன் சுக் இயோல், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது சையது அல் நஹ்யான், எகிப்து அதிபர் அப்தெல்ஃபத்தா அல் சிசி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வலைதளம் மூலம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்