ம.பி.யின் இந்தூரில் 1.9 லட்சம் வாக்குகளுடன் நோட்டா 2-ம் இடம்: காங். பிரச்சார தாக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் 1,92,689 வாக்குகளுடன் நோட்டா 2-வது இடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, நோட்டாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அக்‌ஷய் காண்டி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இது, காங்கிரஸுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில், மாற்று வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்க தயங்கிய காங்கிரஸ், நோட்டவுக்கு வாக்களித்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து, இந்தூரில் 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், பாஜகவின் சிட்டிங் எம்பி ஷங்கர் லால்வானிக்கும் நோட்டாவுக்கும் இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது. இந்தூரின் 72 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பிரதிநிதித்துவம் இல்லாதது இதுவே முதல் முறை.1,92,689 வாக்குகளுடன் நோட்டா 2-வது இடம் பிடித்துள்ளது. வாக்குப் எண்ணிக்கை இன்னும் தொடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் சிட்டிங் எம்பி ஷங்கர் லால்வானி 1,08,8311 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஷோபா ஓசா இது குறித்து கூறியுள்ளதாவது, “இந்த முறை இந்தூரில் நோட்டா குறைந்தது இரண்டு லட்சம் வாக்குகளைப் பெறும். இந்த தேசிய சாதனை வரலாற்றில் இடம்பெறும். ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் பாஜக போன்ற அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்" என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE