ஜெகனை முந்திய பவன் கல்யாண்... ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவர் ஆகிறாரா?

By செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்திராவில் ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை விட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது.

நடிகரும், ஜனசேனா கட்சி நிறுவனருமான பவன் கல்யாண், ஆந்திராவில் உள்ள பிட்டாபுரம் சட்டமன்றத் தொகுதியில் வலுவான முன்னிலையுடன் தனது முதல் தேர்தல் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார். பவன் கல்யாண் தற்போது வரை 63375 வாக்குகள் பெற்றுள்ளார். பவன் கல்யாணை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வாங்க கீதா விஸ்வநாத் போட்டியிடுகிறார். இவர் பெற்றுள்ள வாக்குகள் 28797. இதன்மூலம் 34578 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.

முதல்முறையாக ஆந்திர சட்டப்பேரவைக்குள் உறுப்பினராக நுழையவிருக்கும் பவன் கல்யாண் அநேகமாக எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏனென்றால், தற்போதைய நிலவரப்படி, பவனின் ஜனசேனா போட்டியிட்ட 21 இடங்களில் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேநேரம், ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாலகொண்டா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கும், ஜனசேனா வேட்பாளருக்கும் இடையே 250 வாக்குகள் வித்தியாசமே உள்ளது.

2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். தற்போது அதேபோன்ற நிலைமை பவனுக்கு ஏற்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸை விட அதிக இடங்களை கைப்பற்றுவதன் மூலம் முதல் முறை சட்டப்பேரவைக்கு நுழையும்போதே எதிர்க்கட்சித் தலைவராக நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும், ஜனசேனா கட்சியின் தலைவரும். நடிகருமான பவன்கல்யாண், இம்முறை தெலுங்கு தேசம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளார். கடந்த முறை இவர் தனியாக போட்டியிட்டதின் விளைவாக, தெலுங்கு தேசம் கட்சியின் 6 சதவீத வாக்குகள் சிதறின.

இதனால், ஜெகன்மோகன் ரெட்டி அதே 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைத்தார். இதனால், இம்முறை சந்திரபாபு நாயுடு, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பவன் கல்யாணை தன்னுடன் வைத்து கொண்டார். தொகுதி பங்கீட்டில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டமன்ற மற்றும் 17 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன, பாஜக ஆறு மக்களவை மற்றும் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு, 2 மக்களவை, 21 சட்டப்பேரவை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

இதில் பவன் கல்யாண் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிட்டாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 2019-ல் இவர் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தார். ஆனால், இம்முறை வெற்றியை ருசித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE