கலைஞர் நூற்றாண்டு விழாவின் நினைவு நாணயம்: திட்டமிட்டபடி இன்று வெளியாகாதது ஏன்?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகத்திடம் தமிழக அரசு மனு அளித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் திட்டமிட்டபடி இன்று வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசால் நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964ல் துவங்கப்பட்டது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதை தொடர்ந்து இந்த நினைவு நாணயங்கள் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக வெளியாகின்றன. இவற்றை, மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது.

இந்த வகையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர்.எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.100 மதிப்பில் நினைவுக்காசு வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் கோரப்பட்டிருந்தது. இந்நாணயத்தை, இன்று (ஜுன் 3), கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் வெளியிடவும் திட்டமிடப்பட்டது.

இதன் மீதான செய்தி ஏற்கெனவே கடந்த அக்டோபர் 13, ’இந்து தமிழ் திசை’ நாளேட்டில் வெளியானது. இச்சூழலில், பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாதது முக்கியக் காரணமாக இருப்பது தெரிகிறது.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தமிழக அரசின் டெல்லி அலுவலக வட்டாரம் கூறும்போது, “மத்திய அரசு மனது வைத்தால் ஒரே நாளில் நினைவு நாணயத்தை வெளியிடுகிறது. மத்திய நிதி அமைச்சகத்தால் நினைவு நாணயம் கடைசியாக பிஹாரின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு வெளியிடப்பட்டது. ஆனால், கலைஞர் நாணயம் திருத்தங்களின் பேரில் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது.

இதன் பின்னணியில் உள்ள அரசியலில் சனாதனத்திற்கு எதிரானவர்களுக்கு மத்திய அரசு நாணயம் வெளியிட விரும்பவில்லை எனத் தகவல் கிடைக்கிறது. இதனால், திமுக அரசும் ஒருவேளை ஜுன் 4-ல் இண்டியா கூட்டணி வென்றால் அதன் அரசு சார்பில் வெளியிட்டுக் கொள்ளலாம் என விட்டுவிட்டனர்.” எனத் தெரிவித்தனர்.

நினைவு நாணயத்துக்கான மாதிரி வரைபடம் அதன் மனுதாரர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதை வடிவமைக்கும் பணியை மத்திய நிதியமைச்சகம் செய்கிறது. இதனால், கலைஞர் நாணயத்தின் மாதிரி வரைபடம் தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டது. இச்சூழலில், கலைஞர் நாணயத்தின் இறுதி வடிவம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அதன் சில திருத்தங்கள் இன்னும் முடிவடையாதமையால் அது, நாளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல், தமிழக அரசு சார்பில் கோரப்பட்ட நினைவு நாணயம் நிலுவைக்கு உள்ளாவது முதன்முறையல்ல. இதற்குமுன், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்காக மனு செய்யப்பட்ட நினைவு நாணயமும் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. 2020ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்த போது, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்திருந்தார்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாணயம் வெளியிட மத்திய அரசு விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர்களான காமராஜ், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழகத்தின் தலைவர்கள், பல்வேறு கலைஞர்கள் மீதான பல நினைவு நாணயங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE